மார்ச் 22-ம் தேதி முதல் 9,10,11-ம் வகுப்புகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக இந்த உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்தது.
இதனைத் தொடர்ந்து வரும் திங்கள் கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை 9,10,11-ம் வகுப்புகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
எனினும், முன்பு நடத்தப்பட்டதைப் போன்று 9,10,11-ம் வகுப்புகளுக்கு இணையவழியில் தொடர்ந்து பாடங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற வாரியங்களின் கீழ் இயங்கும் பள்ளிகளில் திட்டமிட்டபடி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்.
பொதுத்தேர்வு காரணமாக 12-ம் வகுப்பிற்கு வழக்கம்போன்று பள்ளிகள் செயல்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும், விடுதிகள் இயங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கரோனா அதிகரித்து வருவதாலும், மாணவர்கள், பொற்றோர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதாலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.